
கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி
இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா உள்பட 7 மாநிலங்களை கடந்து, கடந்த 5-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைந்தது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தானின் ஜாலவார் மாவட்டம் பல்தேவ்புரா நகரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
ராஜஸ்தானில் 18-வது நாளாக ராகுல் காந்தி இன்று காலை 6 மணிக்கு பூந்தி மாவட்டத்தில் பாதயாத்திரை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோதரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டனர். 23-ந்தேதி வரை அவர் ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொள்வார்.
இந்த நிலையில் இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை முறியடித்து உள்ளனர். இந்தியாவில் இளைஞர்களின் அவல நிலையை இந்த வேலையின்மை புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இளைஞர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பளங்களும் உள்ளன. ஆனால் தங்கள் வேலை வாய்ப்பை பெற்று நாட்டை ஒருங்கிணைக்கும் வரை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.