2022 உலக கிண்ண கால்பந்து அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் இன்று (13) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று (13) நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.
கடந்த உலகக் கிண்ண போட்டியில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
இதேவேளை, 1978, 1986 ஆம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜென்டினா, அரையிறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை. அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கிண்ணத்தை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.
இரு அணிகளும் சரி சம பலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.