போபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இதில் பேசியிருந்த ராஜா பட்டேரியா அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால், பிரதமர் மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். பட்டேரியாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை என்று குறிப்பிட்டது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் தேர்தல் தோல்வியை தான் என்று பட்டேரியா விளக்கம் அளித்தபோதிலும் இதனை ஏற்க மறுத்து பாஜ தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராஜா பட்டேரியாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக ராஜா பட்டேரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து டாமோ மாவட்டத்தில் ஹாடாவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்ற போலீசார் சுமார் 5.30மணிக்கு அவரை கைது செய்தனர். அவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பாவாய்க்கு அழைத்து செல்லப்பட்டார்.