173 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் கனிஷ்ட சுகாதார உதவியாளரை நாளை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கனிஷ்ட சுகாதார உதவியாளர் கேகாலை வைத்தியசாலையில் இருந்து சில காலமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் சிவில் ஒருவரைப் போல் நடித்து, குறித்த நபரிடம் இருந்து மூன்று வகையான 40 போதை மாத்திரைகளை 2000 ரூபாவிற்கு பெற்றுள்ளார். இதன்போது சுகாதார உதவியாளர் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் பணிபுரியும் வார்டில் உள்ள அலுமாரி ஒன்றை பொலிஸார் சோதனை செய்தபோது, அதிலிருந்து மேலும் 133 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை நாளை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.