ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற 3 மாணவர்கள் தற்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் இயங்கி வரும் பிரபல பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 3 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கு பயிற்சி  அளிக்கும் தனியார் மையங்கள் நூற்றுக்கணக்கில் இயங்கி வருகின்றன. நாடெங்கும் இருந்து ஏராளமான மாணவர்கள் கோட்டா நகரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் பீகாரை சேர்ந்த அங்குஷ் (16), உஜ்வால் (17) மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரணவ் (18) ஆகிய 3 மாணவர்களும் பயிற்சி பெற்று வந்தனர். அங்குஷ் பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கும், உஜ்வால் மற்றும் பிரணவ் நீட் தேர்வுக்கும் தயாராகி கொண்டிருந்தனர்.

இந்த மூன்று பேரும் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை தொடர்பாக எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. ஆனால், பயிற்சி மையம் கொடுத்த மனஅழுத்தமே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோட்டாவில் உள்ள மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே, நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சிறந்து கல்லூரிகளில் சேர வேண்டும் என்று பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு தீவிர அழுத்தம் தரப்படுவதுதான் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக, நீண்ட வகுப்பு நேரங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் மாணவர்கள் மனஅழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுப்பதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.