அவல்பூந்துறை படகு இல்லம்… வேற லெவல் ஏற்பாடு… ஈரோடு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளூர் ஊராட்சியை அடுத்த அவல்பூந்துறையில் 198.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட குளம் ஒன்று அமைந்துள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவல்பூந்துறையை சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்னென்ன பணிகள்?

அதாவது, குளத்தில் படகுகளை இயக்கவும், சிறுவர் பூங்கா அமைக்கவும் பணிகள் நடக்கின்றன. இவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சில அறிவுரைகளை வழங்கினார். மேலும் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

விரைவுபடுத்தப்படும் பணிகள்

அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு நீர்வரத்து பகுதியில் உள்ள இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பசுமைக் குழுவின் மூலமாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு

அவல்பூந்துறை பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை சுத்தம் செய்து குளத்தில் விடுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவல்பூந்துறை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகாரிகள் நேரில் ஆய்வு

அப்போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, ஒன்றிய குழுத் தலைவர் கணபதி, துணைத் தலைவர் மயில் என்ற சுப்பிரமணி, குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சரோஜா சண்முகம், வட்டாட்சியர் சண்முக சுந்தரம்,

ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், சரவணன், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் சித்ரா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

அவல்பூந்துறைக்கு எப்படி செல்வது?

அவல்பூந்துறை ஒரு பேரூராட்சி ஆகும். இது ஈரோடு – காங்கேயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தெற்கில் சென்றால் அவல்பூந்துறை வந்துவிடும். மேலும் மொடக்குறிச்சியில் இருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும்,

வெள்ளோட்டில் இருந்து கிழக்கில் 8 கிலோமீட்டர் தொலைவிலும், அரச்சலூரில் இருந்து வடக்கே 8 கிலோமீட்டர் தொலைவிலும் அவல்பூந்துறை அமைந்துள்ளது. இது மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. மக்களவை தொகுதியை பொறுத்தவரை ஈரோடு தொகுதிக்குள் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.