உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை…

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மொத்தம்  34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 28 நீதிபதிகள் உள்ள நிலையில்  6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைத்தொடர்ந்து காலியாக உள்ள பணியிங்கள் நிரம்பும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க பரிந்துரைத்துள்ளது.

அதன்படி பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்ய பரிந்துரைத்துள்ளது.  , ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும். அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்றபிறகு, மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் பரிந்துரை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.