
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் வசித்து வந்தவர் பரசுராம குலாலி (54). இவர் முதோலை புறநகர் பகுதியில் உள்ள, மாண்டூர் பைபாஸ் அருகே தனது தோட்டத்தில் தங்கி வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பரசுராம குலாலி, அவரது சொந்த மகன் வித்தல குலாலி (20) என்பவரை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், குடிபோதையில் கொடூரமான முறையில் மகனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வித்தல தனது தந்தையை அருகில் இருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரசுராம துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தந்தையின் சடலத்தை மறைப்பதற்காக, அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உடலை போடுவது என முடிவெடுத்து கொண்டுச் சென்றுள்ளார். ஆனால், உடல் ஆழ்துளை கிணற்றில் இறங்காததால், கோடாரியைக் கொண்டுவந்து உடலை, 30-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்டுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் துர்நாற்றம் வீசியுள்ளதை அறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகன் கொலையை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.