வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்கோட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் வெங்கடேசன் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வரும் நிலையில் கடந்த 9ம் தேதி மாலை வேலை தேடி செல்வதாக அவரது தாயிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசனின் தம்பி மணிகண்டன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் வேலை தேடி சென்ற வெங்கடேசன் வெட்டுப்பட்ட ரத்த காயத்துடன் இருப்பது போல் இருந்துள்ளது.

இந்த புகைப்படம் குறித்து வெங்கடேசனின் நண்பர் நிர்மலிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் வெங்கடேசனை யாரை கூட்டிச்சென்று அடித்துப் போட்டு விட்டதாகவும் இதைப்பற்றி நான் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்ததாகவும் மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் கசம் பகுதிக்கு சென்று வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து காட்பாடி தாசில்தார் ஜெகதீசன் வரவழைக்கப்பட்டு அவரது முன்னிலையில் வெங்கடேசனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காட்பாடி காவல் துறையினர் பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த திவாகர், சதீஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கரிகிரி சூர்யா, கரிகிரி மணி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கரிகிரி சூர்யா மீது திருவலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கு சம்பந்தமான பதிவேடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கடேசனை கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி காவல்துறையினர் தனி படை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.