கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்த குலசேகரத்தில் மகளிர் காண இலவச பேருந்து முறையாக நிறுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று காலை பள்ளிக்குச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை பேருந்தில் ஏற முயன்ற போது கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை குலசேகரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த தனியார் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின் கட்டண விழா அரசு பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது பேருந்து நிறுத்தத்தை நோக்கி வந்த மகளிர் காண இலவச பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின் ஓடிச் சென்று பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.
அப்பொழுது தவறி கீழே விழுந்த ஆசிரியர் மேரி கிளாட்லினுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டதையும் பொறுப்பெடுத்தாத ஆசிரியை தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “காலையிலிருந்து பேருந்துக்காக காத்திருக்கிறேன். மூன்று கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் நிற்காமல் சென்று விட்டன. பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்து நிறுத்துவது இல்லை என குலசேகரம் பேருந்து டிப்போவில் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்டணத்துடன் கூடிய பேருந்துகளை சரியாக பேருந்து நிலையத்தில் நிறுத்துகின்றனர்.
நாங்கள் இலவச பேருந்துகளை கேட்கவில்லை, சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம். மகளிர் இலவச பேருந்து என்று சொல்லி சரியாக நிற்காமல் செல்வதற்கு எதற்கு பேருந்து. பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்று நிறுத்துகின்றனர். இலவச பேருந்தில் ஏறுவதற்கு முன்பே பேருந்தை இயக்குகின்றனர். பேருந்தில் இறங்குவதற்கு ஆள் இருந்தால் மட்டுமே பேருந்தை நிறுத்துகின்றனர்” என ரத்தம் சொட்ட சொட்ட தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.