5 நாள்களுக்கு மழைதான்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை தொடரும். அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்றுவீசும். மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக குன்னூரில் 3 செ.மீ அளவுக்கு அதிகனமழை பெய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்தத் தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்தது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் அது. புயலாக வலுவடைந்த மாண்டஸ் அதற்கடுத்து தீவிர புயலாக மாறி வங்கக்கடலிலேயே நிலை கொண்டிருந்தது.

இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆங்காங்கே பலத்த காற்றும் வீசியது. சென்னையைப் பொறுத்தவரை மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து அதன் மையப்பகுதியானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 10ஆம் தேதி அதிகாலை மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலானது முழுமையாக கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றானது 70 முதல் 80 கிலோமீட்டர்வரை பலமாக வீசியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.