கள்ளக்குறிச்சி மாணவி செல்போன்: பெற்றோரை விசாரிக்க நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மரணத்திற்கு முன்பு மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி கடந்த முறை விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் பெற்றோர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தனது மகள் செல்போன் வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வார்டனின் செல்போனிலிருந்தே பேசியதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்றும், ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

அதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவி தந்தை தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் எனவும் அதற்காக விசாரிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, செல்போன் இருந்தால் உடனடியாக அதனை ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.