இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகதீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடலான ‘பேஷ்ரம் ரங்’ சமீபத்தில் வெளியானது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இந்தச் சூழலில் படம் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்பதில் ஷாருக்கான் தீர்க்கமாக இருக்கிறார். எனவே ஷாருக்கான் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். கோயிலில் வழிபட்டதோடு அங்கு வழங்கப்பட்ட குங்குமத்தைத் தனது நெற்றியில் வைத்துக்கொண்டார். மேலும் அங்குத் தன்னை காண வந்த ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
முன்னதாக பேஷ்ரம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் தோன்றியிருந்தார். இதற்கு சிலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ‘பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும்.
இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்’ என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.