உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (டிச. 16) காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் நடந்து சென்றும் தரிசனம் செய்து சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ரூ.2 கோடியே 29 லட்சம் ரொக்க பணமும், 228 கிராம் தங்கமும், 1478 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் சுமார் 400 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அருணாசலேசுவரர் திருக்கோயிலிக்கு பௌர்ணமி அன்று வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள்.
பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற அருணாசலேசுவரரை வேண்டி நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்கம் வெள்ளி போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழா மற்றும் கார்த்திகை மாத பௌர்ணமி மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.