திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிப்பதற்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பிற மாவட்டங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் தங்க நாணயங்களை திருடி சென்றதாக புகார் எழுந்தது. இந்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளித்தது.
இது தொடர்பாக இன்று சமயபுரம் கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சியின் பதிவுகளை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சி.சி.டி.வி. காட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரி கைவரிசை காட்டியிருந்தால் உடனடியாக அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளனர். இதனால் கோவில் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.