டிசம்பர் 20 கச்சேரி இருக்கு… புரட்டி எடுக்கப் போகுது… தமிழகத்திற்கு மழை அலர்ட் வந்தாச்சு!

மாண்டஸ் புயல் கரையை கடந்து ஒருவாரம் ஆகிவிட்டது. டிசம்பர் 9ஆம் தேதி மகாபலிபுரம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு மழை எட்டி பார்க்கவில்லை. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழகத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், வரும் 20 முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்யக்கூடும். அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து மீம்ஸ் போட்டு சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 20ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 20ஆம் தேதி அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் மத்திய கிழக்கை ஒட்டிய பகுதியில் இன்று (டிசம்பர் 16) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வங்கக்கடலின் தெற்கே நாளை (டிசம்பர் 17) காலை வலுப்பெறக் கூடும். இதனால் நிகோபார் தீவுகளின் பல இடங்களில் இன்றைய தினம் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யக்கூடும்.

காற்றின் வேகத்தை பொறுத்தவரை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடலில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் (அதிகபட்சமாக 55 கி.மீ) வரை காற்று வீச வாய்ப்புள்ளது.

இதனால் நாளை காலை வரை தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அரபிக் கடலின் மேற்கு மத்திய மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது 13 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். நாளை மாலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.