காலியாக உள்ள கரூர் கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,  தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீல் இட்ட கவரில்  தாக்கல் செய்ய தேர்தல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்ட கவுன்சிலர் துணை தலைவராக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர், சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, அவர்கள்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது.

இந்த பதவியை நிரப்பக்கோரி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிகா என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். இதில் மாவட்ட கவுன்சில் தலைவர், மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே காலியாக உள்ள கரூர் மாவட்ட கவுன்சிலர் துணை தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கரூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 19ஆம் தேதி நடத்திக் கொள்ளலாம், தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,   வாக்கு பதிவு வெற்றி விவரங்களை நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் வெளியிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்திய மற்றும் வாக்கு பதிவு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதாரருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.