போற்றுதலுக்குரிய மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பர்வத மலையில் கொட்டும் பனியில் பக்தர்கள் கிரிவலம்

கலசபாக்கம்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று அதிகாலை பர்வத மலையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் பெரியநாயகி சமேத கரை கண்டீஸ்வரர் கோயில் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் தனுர்(மார்கழி) மாத உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கோயிலில் பாலாலயம் நடந்து, திருப்பணிகள் தொடங்கியுள்ளதால் தனுர் மாத உற்சவம் நடக்கவில்லை.

அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத பிறப்பின்போது பெரியநாயகி சமேத கரை கண்டீஸ்வரர் மற்றும் பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உற்சவம் மூர்த்திகள் கிரிவலம் வருவது வழக்கம். பக்தர்களும் கிரிவலம் வருவார்கள். ஆனால், கோயில் திருப்பணிகள் நடப்பதால் சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தவில்லை. இருப்பினும், நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

முன்னதாக, கரை கண்டீஸ்வரர் கோயிலில் சுவாமியை தரிசித்துவிட்டு கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி வடகாளியம்மன் வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் வழியாக 23 கிலோ மீட்டர் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து, தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலையின் உச்சிக்கு சென்று பிரம்மராம்பிகை சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரரை தரிசனம் செய்தனர். செங்குத்தான கடப்பாரை படிகள் வழியாக ஏறும்போது பக்தர்களின் அரோகரா கோஷம் பர்வத மலையை உலுக்கியது.

வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் புத்திர பாக்கியம், செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் அன்னதானம் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.