கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டம் வரை தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து தென்னக ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து செயப்பட்டது. ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.