ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாடேப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சரண் (35). இவரது மனைவி மாதவி (32). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆண் குழந்தை இல்லாத ஏக்கம் இருந்தது.
இந்நிலையில் மாதவியிடம், ‘எனது 2 தம்பிகளுக்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்து சம்பிரதாயத்தில் நாம் இறந்தால் மகன் தான் இறுதி சடங்கு செய்யவேண்டும். எனவே, நமக்கு ஆண் குழந்தை வேண்டும்’ என கூறியுள்ளார். அதே நேரத்தில், மங்களகிரியை சேர்ந்த ஆர்எம்பி மருத்துவர் ரமாதேவி மூலம் மாதவிக்கு சத்து மருந்து எனக்கூறி 3 முறை நரம்பில் மருந்து செலுத்தினர். அதற்கு பிறகு அவரது உடல் சோர்வு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மாதவிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாதவி, தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் கடந்த 16-ம் தேதி புகார் செய்தார்.
அதில், ‘எனது கணவர் சரண் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள முயன்று வருகிறார். இதுகுறித்து கேட்டதால் என்னை எப்படியாவது ஒதுக்கி வைக்க எனது கணவர் உடல் பலவீனமாக இருப்பதாகவும், ஆண் குழந்தை பிறக்க சத்து மருந்து தேவை எனவும் கூறி எச்ஐவி தொற்று ஊசியை எனக்கு செலுத்தியுள்ளார். மேலும், சரணுக்கு 21 வயதான இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே விட்டுச் செல்லும்படி மிரட்டி அடித்து வருகிறார்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் சரணை கைது செய்து, மருத்துவர் ரமாதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை தன்மையை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.