தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. கலந்தாய்வில் 3,530 இடங்கள் நிரம்பின

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை. கலந்தாய்வில் 3,530 இடங்கள் நிரம்பியுள்ளன. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு நடந்து முடிந்துள்ளது.

இதில், கடந்த 5ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 4,689 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு மூலம் 3,530 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 1,159 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரியில் வரும் 21ம் தேதிக்குள் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 21ம் தேதிக்கு பின்னர் காலியிடங்கள் கணக்கிடப்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். ஜனவரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.