நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு புது வித சிக்கல்! வெளியாவது சந்தேகம்?

‘மாயா’ படத்திற்கு பின்னர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடித்து முடித்திருக்கும் ‘கனெக்ட்’ படம் டிசம்பர்-22ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் தற்போது படத்திற்கெதிராக சிக்கல் எழுந்துள்ளது.  நயன்தாராவும், சர்ச்சைகளும் பிரிக்கமுடியாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், அந்த வகையில் தற்போது அவர் படத்திற்கு சிக்கல் வந்துள்ளது.  கனெக்ட் படம் இடைவேளை இன்றி திரையிடப்படும் என்று ஏற்கனவே இயக்குனர் அஷ்வின் சரவணன் அறிவித்து இருந்ததால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது ‘கனெக்ட்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படத்திற்கு இடையில் இடைவேளை விடப்படும், அப்போது திரையரங்கில் உள்ள கேன்டீன்களில் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.  இடைவேளை சமயத்தில் தான் பார்வையாளர்கள் கேன்டீன் செல்வார்கள், இடைவேளை இல்லாமல் படம் ஓடினால் கேன்டீன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இடைவேளை இல்லாமல் ‘கனெக்ட்’ படத்தை தங்களது திரையரங்குகளில் திரையிட முடியாது என்று கூறியுள்ளனர்.  படத்தை திரையிட்டால் இடைவேளையுடன் மட்டும் தான் திரையிடுவோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘கனெக்ட்’ படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து இருக்கிறார்.  இந்த படத்தில் நயன்தாராவுடன், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் லிரிக்ஸ் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் தற்போது இப்படத்திற்கு இப்படியொரு சிக்கல் எழுந்திருப்பது ரசிகர்களிடையேயும், படக்குழுவினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.