போன் பே, கூகுள் பே (ஜிபே) உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் பண பரிவர்த்தனை செய்வதில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது.
உலக அளவில் பணத்தை வைத்து பெரும்பாலான பரிமாற்றங்கள் செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. மெல்ல மெல்ல பல தரப்பட்ட மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு மாறி வந்த நிலையில், கொரோனா பேரிடருக்கு பிறகு டீக்கடை முதல் நகைக் கடை வரை பணமில்லா எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனையை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.
தேசிய கட்டணக் கழகத்தின் (என்பிசிஐ) தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு போன்பே, ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் என்பிசிஐ நடத்திய ஆலோசனையில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்டுப்பாடாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அதிலும், கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை மட்டுமே அனுமதிக்கும். வங்கிகளின் கொள்கைகள் பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும்.
இரண்டாவதாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே, பேடிஎம், ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும், எத்தனை முறை பரிவர்த்தனை, அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் பரிவர்த்தனை செய்யலாம் என்பது வங்கிகளை பொறுத்தும், செயலிகளை பொறுத்தும் மாறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.