
ஸ்டாலின் முன்பு சொன்னதைபோல, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுகவின் முள்ளாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் சாதி, மத பாகுபாடு இன்றி கொண்டாடக் கூடிய திருவிழா பொங்கல் பண்டிகை.

அதிமுக ஆட்சியில் இரண்டு கோடியே 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுத்துள்ளோம். அன்றைக்கு இருந்த எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பரிசு கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
அவர் முன்பு கூறியது போன்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர் 5000 வழங்குவார் என்று நம்புகிறோம். ஆதார் கார்டுடன் ரேஷன் அட்டையை இணைத்தவர்களுக்கு தான் பொங்கல் பரிசு தொகுப்பு என்று கூறி விடாமல், அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொகை என்பது ஏழை மக்களைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பொங்கல் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றிக் கொடுங்கள் முதல்வர் அவர்களே எனக் கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் முதல்வர் அவர்கள் கூறியது போன்று 5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்” என்றார்.