சென்னையில் உள்ள திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பாரிமுனையில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில், வரலாறு துறையில், இரண்டாம் ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகிறார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஆர். கே. நகர் அரசு கலைக் கல்லூரியில், படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அவர்களின் நட்பால் இருவரும் மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் மூலம் இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப் சாட்டிங் மற்றும் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த 15 ஆம் தேதி இரவு வீடியோகாலில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த மாணவன் ஆபாச வார்த்தைகளில் பேசி மாணவியிடம் ஆடையைக் கழட்டுமாறு வற்புறுத்தியுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த மாணவி அவரது மொபைல் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவன் மாணவிக்கு விடாமல் போன் செய்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, சம்பவம் தொடர்பான முழு விவரத்தையும் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.
பின்னர் அந்த மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாட்ஸ் அப் வீடியோ காலில் கல்லூரி மாணவிக்கு, மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.