ஆதார் எண் இணைக்க தடையில்லை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு பெற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல் ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டால் அவர்கள் காலி செய்த பிறகு புதிதாக வருபவரின் ஆதார் எண் இணைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது. அரசு நடத்தும் சிறப்பு முகாம்களில் ஆதார் எண்ணுக்கு பதிலாக வேறு ஆவண எண்களை இருக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் சலுகைகள் கிடைக்காது என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் வரத சக்கரவர்த்தி அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மானியம் கிடைக்காது. அதேபோன்று ஆதார் எண் இணைப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை தமிழக மின்சார வாரியம் பெறவில்லை” என வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர் “வாடகைதாரர்கள் மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை. மின் இணைப்பு எண் அடிப்படையில் தான் ஆதார் எண் இணைக்கப்படும்.

அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகு இந்த ஆதார் இணைப்பு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் “இந்த வழக்கை பொறுத்தவரை எந்தவித அடிப்படை ஆதாரமும், தகுதியும் இல்லை. எனவே மனுதாரர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.