மகாராஷ்டிரா: தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி-பலே கும்பல் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநில தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மர்ம கும்பல் மோசடி செய்தது. மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த சாகர் ஜாதவ் என்பவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்த பிறகுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சாகர் ஜாதவ் போலீஸில் கொடுத்த புகாரில், “நண்பர் ஒருவர் மூலம் மகேந்திர சக்பால் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சக்பால் தனக்கு மந்த்ராலயா எனப்படும் மாநில தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், அங்குப் பணியாற்றும் நிதின் என்பவர் மந்த்ராலயாவில் வேலை வாங்கிக்கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆறு லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கிக்கொடுப்பதாக தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய சகோதரி மற்றும் சகோதரன் மூவரும் 2020-ம் ஆண்டு அரசு வேலைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தையும், சான்றிதழ்களையும் கொடுத்தோம்.

மோசடி

மூன்று பேரையும் ஜெ ஜெ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். அதன் பிறகு லாக்டவுன் வந்ததால் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக சக்பால் தெரிவித்தார். நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால், பாதி வேலை முடிந்தது என்றும், மேலும் ஆறு லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்றும் சக்பால் கேட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நேர்முகத்தேர்வுக்காக எங்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார். உடனே நாங்கள் மீண்டும் ரூபாய் இருபது லட்சத்தை கொடுத்துவிட்டு நேர்முகத்தேர்வுக்காக மூன்று பேரும் தலைமைச் செயலகத்துக்குச் சென்றோம். எங்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று நிதின் என்பவர் எங்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தினார்.

நிதின் தன்னை இணைச் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நேர்முகத்தேர்வு நடந்த பிறகும் வேலைக்கு அழைக்காததால் நாங்களே இது குறித்து விசாரித்தபோது நிதின் என்ற பெயரில் இணைச் செயலாளர் யாரும் கிடையாது என்று தெரியவந்தது. அதோடு எங்களைப் போல் மேலும் பலர் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்திருந்தது தெரியவந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமைச் செயலகத்தில் பியூனாக வேலை செய்த நிதின் உட்பட 3 பேரை கைதுசெய்தனர்.

கைதான சச்சின், மகாதேவ், நிதின்

சக்பால் தலைமறைவாகிவிட்டார். நிதின், சச்சின், மகாதேவ் ஷிர்வாலே ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 12-க்கும் அதிகமானோரிடம் ரூ.74 லட்சத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களை போலீஸார் தங்களது காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக அனைவரிடமும் பணத்தை காசோலையாகவே வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் சக்பால் கைதுசெய்யப்பட்டால்தான் எத்தனை பேர் உண்மையில் ஏமாந்திருக்கின்றனர் என்ற முழு விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.