திருச்சி: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறுகையில், 2021 ஆகஸ்ட் 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தற்போது அந்த திட்டத்தின் மூலம் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக முதலமைச்சர் மாற்றியதுதான்.
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா மரபணு சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தையும், கொரோனா குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.