மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்க தடையில்லை!

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அடிப்படை ஆதாரமற்ற முறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.