காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் ஆப்கன் அரசின் உயர்கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உயர்கல்வி அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாவுல்லா ஹாஷிமி நேற்று உறுதி செய்தார்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று கூறும்போது, “ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் கல்வி கற்காமல் ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடையும்” என்று கவலை தெரிவித்தார்.