புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி  தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, அரையாண்டு விடுமுறையில் வருவதால், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதுபோல தெற்குரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இந்த நிலையில்,  ஆங்கில புத்தாண்டையொட்டி தாம்பரம்த்தில் இருந்து நாகர்கோவில் வரை  இயக்கப்பட  உள்ள சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரெயில் (06042) வருகிற 26-ந்தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளி பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது.

நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06020) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 1-ந்தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையுமாறு இயக்கப்பட உள்ளது. ம று மார்க்கத்தில் தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரெயில் (06019) தாம்பரத்திலிருந்து ஜனவரி 2-ந்தேதி மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த ரெயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.