உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாசிம், சாருக். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும், கடந்த 20-ஆம் தேதி கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சூலூர் காவல் நிலைய போலீசார் முருகன் மற்றும் பள்ளபாளையத்தை சேர்ந்த பிரதீஸ் உள்ளிட்டோர் தாசிம் மற்றும் சாரூக்கை தடுத்து நிறுத்தினர்.
அதன் பின்னர் காவலர் முருகன் தாசிம் மற்றும் சாரூக்கிடம் “இது திருட்டு டிவி தானே உங்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது உங்களை விசாரிக்க வேண்டும்” என்று கூறி அந்தப் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்புக்குள் அழைத்துச் சென்று, இரண்டு பேரையும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்ற முகவரியை கேட்டு தாசிமுடன் போலீஸ்காரர் முருகன் மற்றும் பிரதீஷ் உள்ளிட்டோர் ஒரு காரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து டி.வி.க்கள், கியாஸ் அடுப்பு மற்றும் ரூ.47 ஆயிரம் பணம் போன்றவற்றை காவலர் முருகன் பறித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தாசிம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் முருகன் மற்றும் பிரதீஷ் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.