ஆளுநர் ஒப்புதல்.. அமலுக்கு வரும் மதமாற்ற தடை சட்டம்!

இந்தியாவில் கடந்த 1960ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்தே மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நாட்டிலேயே மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா தான்.

கடந்த 1967ம் ஆண்டு ஒடிசா மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் ‘எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறு விதமாகவோ, எந்த ஒரு மதத்தை சேர்ந்த நபரையும் மற்றொரு மதத்திற்கு வலுக்கட்டாயமாக அல்லது தூண்டுதல் மூலமாகவோ மாற்ற முயற்சிக்க கூடாது’ என அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு கர்நாடகா மாநில அரசு கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. கட்டாய மதமாற்ற தடை சட்டம் எந்த மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவது இல்லை.

மத மாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்ட விரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்று தான், சட்டம் வலியுறுத்துகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இதை பின்பற்றி கடந்த 1968ம் ஆண்டு சட்டத்தை இயற்றியது. இதன்படி, எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறு விதமாகவோ ஒருவரை மற்றொரு மதத்திற்கு மாற்ற முயற்சிக்கக் கூடாது.

அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் 1978ல் அருணாச்சலப் பிரதேச மத சுதந்திர சட்டத்தை இயற்றியது. கடந்த 2018ம் ஆண்டு பெமா காண்டு அரசாங்கத்தால் சட்டம் ரத்தானது.

சத்தீஸ்கர் மாநிலம் கூட கடந்த 2000ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிந்த பிறகு மத்திய பிரதேச அரசாங்கத்தின் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை தக்க வைத்துக் கொண்டது. இதன் பின்னர் சத்தீஸ்கர் மத சுதந்திர (திருத்தம்) சட்டம் கடந்த 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலித்தா தலைமையிலான தமிழ்நாடு அரசு 2002ம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றியது. ஆனால் 2004ம் ஆண்டு சட்டத்தை திரும்ப பெறப்பட்டது.

குஜராத் மாநிலம் குஜராத் மத சுதந்திர சட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு இயற்றியது. பின்னர் இந்த சட்டம் திருத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேசம் அரசு கடந்த 2006ம் ஆண்டு இமாச்சல பிரதேச மத சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியது. இதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டு அந்த சட்டம் திருத்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கடந்த 2006ல் ராஜஸ்தான் மத சுதந்திர மசோதாவை இயற்றியது. ஆனால் இந்த மசோதா மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜார்க்கண்ட் மத சுதந்திர சட்டம் 2017ஐ நிறைவேற்றியது.

இந்த வரிசையில் கட்டாய மத மாற்றத் தடை சட்ட மசோதாவை உத்தரகாண்ட் அரசு கடந்த நவம்பர் 30ம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாக மாறி உள்ளது.

ஆளுநரின் ஒப்புதலை அடுத்து கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை விரைவில் அமல்படுத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்படி ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்தால் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதிகப்பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.