கொடைக்கானல்: கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ்க்கும் கீழாக வெப்பநிலை குறைந்து கடும் குளிர் வாட்டுவதால் மக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளிர்காலம் தொடங்கியுள்ள நவம்பர் மாதம் முதல் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த 4 நாட்களாக பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தும், இரவு நேரங்களில் கடும் குளிரும் வாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக 8 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சரிந்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.
பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் குளிருக்கு இதமாக கம்பளி உடைகளை அணிந்து தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். கடும் பனிபொழிவால் சுற்றுலாப்பயணிகள் கம்பளி உடைகளை வாங்குவதற்காக கடைகளில் குவிந்துவருகின்றனர். இதனால் ஸ்வீட்டெர் விற்பனை கலைக்கட்டியுள்ளது. வரும் நாட்களில் வெட்பநிலை மேலும் சரிந்தால் உறைபனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதனை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில் கொடைக்கானல் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.