தண்ணி காட்டும் ஆசிரியர்கள்.. மாணவர்களுக்கு ஆப்பு; ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதி!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாணவர் சேர்க்கை 20 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக அதிகரித்து உள்ளதாகவும் மேலும் வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரனமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் வசதிகள், கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணி செய்யும் ஆசிரியர்கள், ஆசிரியல்லாத ஊழியர்கள் போதிய கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் எந்த நேரத்திலும் வீட்டுக்கு அல்லது சொந்த வேலையாக வெளியில் சென்று விடுவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்தபடி உள்ளது.

இதை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவுகள் ஜனவரி 1 முதல் TNSED attendence செயலி (App) மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டும் என்று, தமிழக அரசானது அறிவித்துள்ளது.

மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய வருகையை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கு மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டது.

இந்த செயலி, தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் 01.01.2023 முதல் இதனை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் இந்த புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பாக பழைய வருகை பதிவு செயலியில் இருந்து வெளியேற வேண்டும். பழைய செயலிகள் அனைத்தும் 31 டிசம்பர் 2022 முதல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செயலியில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கும் காலை மற்றும் மாலை என, 2 நேரங்களிலும் வருகை பதிவு செய்யப்படும்.

அதுமட்டும் இல்லாமல், இணைய சேவை இல்லாத நேரத்தில் வருகைப் பதிவு செல்போனில் பதிவு செய்யப்பட்டு, இணைய சேவை கிடைத்தவுடன் கல்வித்துறைக்கு அப்டேட் ஆகி விடும்.

அதேப் போல், இதுவரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் விடுப்பு விபரங்கள் கல்வித்துறையை அடைய 2 முதல் 4 நாட்கள் வரை ஆகி வந்த நிலையில் புதிய செயலியால் உடனுக்குடன் தெரியும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விடுப்புக்கான விண்ணப்பமும் இந்த செயலி மூலம் செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலிக்குள் நுழைய ஏற்கனவே பணியாளர்கள் பயன்படுத்திய பயனாளர் ஐ.டி மற்றும் ரகசிய எண்ணை (user name, password) புதிய செயலிக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையால் பள்ளிகளுக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றும் மாணவர்கள் மற்றும் சொந்த வேலைகள் நிமித்தம் வெளியே சென்றுவிடும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆப்பு வைக்கப்பட்டு உள்ளதால், பள்ளி கல்வித் துறையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.