வாரிசா துணிவா…? வடிவேலையும் விடாத கேள்வி… அவர் சொன்ன பதில் இருக்கே!

வடிவேலு நடிப்பில், சிராஜ் இயக்கத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் கடந்த டிச. 9ஆம் தேதி வெளியானது. தலைநகரம் படத்தில் வடிவேலுவின் மிக பிரபலமான கதாபாத்திரத்தை அடிப்பைடயாக வைத்து இந்த படம் உருவானது. 

இதற்கு முன்னர், சதீஷ் நடிப்பில் நாய் சேகர் என்ற பட தலைப்பு பதிவு செய்யப்பட்டதால், இப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வடிவேலு மாஸும், கிளாசும் மட்டும் இன்னும் குறையவே இல்லை. 

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்றிரவு (டிச. 23) சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். 

சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3ஆவது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம்” என்றார். முன்னதாக கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.