ராஜ்கோட்: புதிய கல்விக் கொள்கை மூலம் முற்போக்கான, எதிர்காலத்துக்கு தேவையான கல்வி முறை உருவாக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுலத்தின் 75-வது அமிர்த பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு நம்முடைய கல்விக் கொள்கைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, சுதந்திர இந்தியாவின் அமிர்த காலத்தில், கல்வித் துறை சார்ந்த உள்கட்டமைப்பாக இருந்தாலும் அல்லது கல்விக் கொள்கையாக இருந்தாலும் அவற்றை மேம்படுத்துவதிலும் விரிவாக்கம் செய்வதிலும் நாம் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.
நம் நாட்டில் இப்போது ஐஐடி,ஐஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ்ஆகிய உயர்க்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை மூலம் நம் நாட்டில் முதல் முறையாக முற்போக்கான மற்றும் எதிர்காலத்துக்கு தேவையான கல்வி முறை உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.