ராஜ்காட்: ‘புதிய கல்விக் கொள்கை மூலமாக நாடு முதல் முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்வி முறையை உருவாக்கி வருகிறது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் ராஜ்கட்டில் உள்ள சுவாமிநாராயண் குருகுலத்தில் 75வது அம்ருத் மகோத்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜ தலைமையிலான அரசு முதல் முறையாக பொறுப்பேற்றது முதல் அதாவது 2014ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஐஐடிக்கள், ஐஐஎம் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கு தற்போதுள்ள நமது கல்வி கொள்கை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 75வது ஆண்டு சுதந்திர விழாவில் கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும், கல்வி கொள்கையாக இருந்தாலும் அதிக வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 65 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கையின் மூலமாக நாடு முதல் முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்விமுறையை உருவாக்கி வருகின்றது. சிறந்த கல்வி முறையில் வளர்க்கப்படும் சிறந்த குடிமக்களும், இளைஞர்களும், 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நூற்றாண்டை கொண்டாடும்போது வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதற்கு பாடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.