கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மைசூரு-கண்ணூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் மைசூரு-கண்ணூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06221) வரும் 30-ம் தேதி, ஜனவரி 1-ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். மறுநாள் மாலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
இதேபோல, கண்ணூர்-மைசூரு இடையிலான சிறப்பு ரயில் வரும் 31ம் தேதி, ஜனவரி 2ம் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.30 மணிக்கு மைசூரு சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள், தலசேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சொர்ணூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.