இளம்பிள்ளை: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே அ.புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு, சிறப்பு வகுப்பின்போது இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன், சாப்பாடு ஊட்டும் காட்சிகளும், இருசக்கர வாகனத்தில் மாணவியை வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகளும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதையறிந்த பள்ளி ஆசிரியர், கடந்த 6ம் தேதி அந்த மாணவியிடம் அவரது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த மாணவி, வீட்டுக்கு சென்றதும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அப்போது, குறிப்பிட்ட அந்த ஆசிரியர் தன்னை பலாத்காரம் செய்ய அழைத்ததால், தான் அவமானத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில், அந்த மாணவி மாணவனுடன் தனக்கு இருக்கும் பழக்கத்தை மூடி மறைப்பதற்காக, ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகார் கூறியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சைல்டு லைன் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.