கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் நீர் நிலைகளில் முதலைகளும் உள்ளன. இந்நிலையில் கார்குடி அபயாரன்யம் இடையே மாயாற்றில் ராட்சத முதலை ஒன்று ஆற்றங்கரை ஓரத்தில் வெயிலில் ஒய்யாரமாக ஓய்வெடுத்தது.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிலையில் மாயாற்றில் முதலைகள் தென்படுவதால் பாதுகாப்புக் கருதி ஆற்றில் இறங்க கூடாது என்றும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.