சென்னை திமுக கவுன்சிலரின் கணவர் மாமூல் கேட்டு மிரட்டல்; மதுரையில் கைது – நடந்தது என்ன?!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

`கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று மிரட்டி மாமூல் வசூல் செய்திருக்கிறார். இதேபோல, அந்த பகுதியில் கடை வைத்துள்ள மோகனாவிடம் ஜெகதீசன் மாமூல் கேட்டிருக்கிறார். அதற்கு மோகனா பணம் கொடுக்க மறுக்கவே, ஜெகதீசன் தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், இரண்டு தினங்களுக்கு முன்பாக ஜெகதீசனின் ஆள் ஒருவர் மோகனாவின் கடைக்கு சென்று அண்ணன் பணம் வாங்கி வர சொன்னார் என்று கேட்டிருக்கிறார். மோகனாவும் பணம் தரமுடியாது என்று மறுத்துள்ளார். வந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனவிடம் கொடுத்திருக்கிறார். அவர் மோகனவை தகாத வார்த்தைகளால் வசை பாடியதாக சொல்லப்படுகிறது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

மேலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி மோகனா கடை உட்பட அங்கிருந்த நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஜெகதீசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். ஒரு வழியாக மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் அகற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, மோகனா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசனுக்கு எதிராக மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீஸார் தலைமறைவாக இருந்த ஜெகதீசனை தீவிரமாக தேடி வந்தனர். மதுரையில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் தான் கடந்த மார்ச் மாதம் இரவு நேரத்தில் ரோந்தில் ஈடுபட காவலர்களை தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாக குற்றசாட்டு எழுந்தது. அதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீசன், கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.