இந்தியா – பாகிஸ்தான் இடையே அணுசக்தி மையங்களின் பட்டியல் பரஸ்பர பரிமாற்றம்

புதுடெல்லி: அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக பரஸ்பர ஒப்பந்தப்படி தொடர்ந்து 32-வது ஆண்டாக இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்தியாவும், பாகிஸ்தானும், தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ள கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி மையங்கள் இருக்கும் இடங்களின் பட்டியலை பகிர்ந்து கொள்ள வேண்டும். முதல்முறையாக கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் தங்களின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன. தற்போது 32-வதுஆண்டாக அணுசக்தி மையங்களின் பட்டியல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகியவை காரணமாக இரு நாடுகளின் உறவில் விரிசல் இருந்தாலும், இந்த பட்டியல் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.