சென்னை: இந்திய நாட்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் அவசியம் இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் இதனை உறுதி செய்வதற்கான காலக்கெடு வரும் மார்ச், 2025 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மொபைல் போன் தவிர்த்து கீபோர்டு போன்கள் மற்றும் ஹெட்செட் போன்ற சாதனங்களுக்கு இதில் விலக்கு இருக்கும் என அண்மையத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையிலான, நிலையான டைப்-சி சார்ஜிங் போர்ட் வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான சார்ஜிங் போர்ட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் உற்பத்தியாளர்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட் இடம்பெற செய்வதால் கூடும் உற்பத்தி செலவை சுட்டிக்காட்டி உள்ளனர். அதன் காரணத்தால் தற்போது கீபோர்டு போன்கள் மற்றும் ஹெட்செட் போன்ற சாதனங்களுக்கு இதில் விலக்கு இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் இந்தியாவில் கீபோர்டு போன்களை சுமார் 250 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக தகவல். அதனால்தான் இந்த முடிவு என தெரிகிறது.
லேப்டாப் போன்ற கணினி சாதனங்களில் அவசியம் டைப்-சி சார்ஜிங் போர்ட் இருக்க வரும் 2026 வரையில் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் ஐரோப்பிய யூனியனில் கட்டாயம் மொபைல் போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருக்க வேண்டும் என முதன் முதலில் சொல்லப்பட்டது.