16 மாதங்களில் இல்லாத அளவில் டிசம்பரில் வேலையின்மை 8.30% ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த நவம்பரில் வேலையின்மை 8 சதவீதமாக இருந்தது. அது டிசம்பர் மாதம் 8.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஹரியாணாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

நகர்ப்புற வேலையின்மை 8.96 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் கிராமப்புற வேலையின்மை 7.55 சதவீதத்திலிருந்து 7.44 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலையின்மையும் விலைவாசியும் தீவிரடைமந்துள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா ஜிடிபி வளர்ச்சியில் மட்டும் மொத்த கவனத்தையும் மத்திய அரசு செலுத்துகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞர்களின் திறன் மேம்பாடு, ஏற்றுமதியைக் நோக்கமாகக் கொண்டு உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.