உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (21), இவர் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சூர்யா தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகினார்.
அந்த நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி கடந்த 10 நாட்களாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 1-ம்தேதி இரவு சூர்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாததால் அவரை அவரது உறவினர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.