ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ஆறு வயது மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அந்த ஆசிரியை பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அந்த மாணவனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு அறைக்குள் நடந்த வாக்குவாதத்தையடுத்து, மாணவன் ஆசிரியையை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தியுள்ள போலீசார், தற்போது அந்த ஆசிரியையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், “இந்த துப்பாகிச்சூடு சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 6 வயதுதான் ஆகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இதில் அவனது ஆசிரியர் காயமடைந்தார். 30 வயதான அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனிடம் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல்: ஹாரியை தாக்கினாரா வில்லியம்ஸ்?

அதேபோல், தான் மிகுந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் உள்ளதாக விர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்கர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் கைகளில் துப்பாக்கி கிடைக்காததை நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் விபத்து இல்லை என தெரிவித்துள்ள போலீசார், ஆறு வயது சிறுவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.