பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கும் பொங்கல் போனசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு அதற்காக 221 கோடி நிதி ரூபாய் ஒதுக்கியது. அரசு ஊழியர்கள், தொகுப்பூதியம், தினக்கூலிகள் மற்றும் பகுதி நேர ஊழியர்கள் என அனைவருக்கும் போனஸ் உண்டு. ஆனால் 2012 ஆம் ஆண்டு முதல் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மட்டுமே போனஸ் மறுக்கப்படுகிறது.
மற்ற பகுதி நேர ஊழியர்களை போல், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை ஆகும். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு மற்றும் பணி மாறுதல் வழங்கப்படும் என அறிவித்ததால் மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தியது. அது போல் பொங்கல் போனஸ் விஷயத்திலும் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்தால் மட்டுமே பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்துவார்கள்.
இதற்கான கோரிக்கையை நேரிலும், கடிதம், இ-மெயில் மூலமாகவும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வைத்து வருகிறோம். பொங்கல் பண்டிகை வர உள்ளது. இனியும் தாமதிக்காமல் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பொங்கல் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டும். மேலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக சேர்க்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இந்த கோரிக்கை எழுந்து இருக்காது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.