தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்காலம் என்றாலே, மாணவ, மாணவிகளுக்கு கொண்டாட்டம்தான். மழை பெய்தாலும் சரி பெய்யப்போகிறது என்று அறிவிப்பு வெளியானாலும் சரி. சற்று நேரத்தில் விடுமுறை அறிவிப்பும் வந்துவிடும் என்று தொலைக்காட்சிகள் முன்பு தவம் இருப்பார்கள்.
இப்போதெல்லாம் ஒரு படிமேலே சென்று, நேரடியாகவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தொடர்புகொண்டு விடுமுறை அறிவிக்கும்படி ஆலோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். இது எல்லாம் இன்றோடு முடிவுக்கு வருகிறது.
அதாவது, நாளையுடன் (ஜனவரி 12-ம் தேதி) வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளிலிருந்து விகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. அடுத்த 24 மணி நேரத்துக்கும் மழைக்கான அறிவிப்பு இல்லை. வறண்ட வானிலையே தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.