சென்னை: ‘தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஏதுவாக, 1914-ம் ஆண்டு பழைய சட்டத்துக்கு பதில், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா?’ என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பழமையான 1914ம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால், சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “பழமையான இந்த சட்டப்படி தான் இதுவரை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மனுவில் எந்த கோரிக்கையும் எழுப்பப்படாத நிலையில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது.மேலும் நூறு ஆண்டுகளாக வாக்குச்சீட்டு முறையில் எந்த குளறுபடிகளும் இல்லாமல்தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது” என்று கோரப்பட்டிருந்தது. இதேபோல் தற்போதைய நிர்வாகிகள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது மருத்துவ கவுன்சில் தரப்பில், “தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் பிப்ரவரி 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சட்டத்தின்படியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எனவே பிப்ரவரி மாதத்துக்குள் அரசு சட்டம் கொண்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தரப்பில், “தேர்தல் என்பது ஏழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவே நடத்தப்படுகிறது. இதற்கும் நியமன உறுப்பினர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்டத்தில் முழுமையாக திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து ஜனவரி 23-ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.